கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தை அடுத்து இலங்கையில் சுற்றுலா மேற்கொள்வது தொடர்பில் விடுத்திருந்த எச்சரிக்கை அறிவுறுத்தலை கடுமையாக பின்பற்ற அமெரிக்கா மற்றும் பிரித்தானியா நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் இந்த எச்சரிக்கை அறிவுறுத்தலை நேற்று மீண்டும் கடுமையாக்கியுள்ளது.
தீவிரவாத குழுக்கள் இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த முயற்சிக்க கூடும் என அமெரிக்கா எச்சரிக்கை அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
தாக்குதல்களுக்காக போக்குவரத்து மத்திய நிலையங்கள், வர்த்தக நிலையங்கள், கடைத்தொகுதிகள், அரசாங்க கட்டிடங்கள், சுற்றுலா விருந்தகங்கள், வழிப்பாட்டு தலங்கள், கலாச்சார நிகழ்வுகள், கல்வி நிறுவனங்கள், வானுர்தி தளங்கள் உள்ளிட்ட ஏனைய பொது இடங்களை பயன்படுத்த கூடும் என அமெரிக்க தூதுவராலயம் தெரிவித்துள்ளது.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் பின்பற்ற வேண்டிய ஆலோசனைகளை அமெரிக்க தூதுவராலயம் வெளியிட்டுள்ளது.
இதனிடையே, பிரித்தானியா தமது பிரஜைகளுக்கு புதிய எச்சரிக்கை அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதலை மேற்கொண்ட குழுவின் ஏனைய உறுப்பினர்கள் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தக் கூடிய ஏதுநிலை இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இலங்கையில் தேவையற்ற விஜயங்களை தவிர்த்து கொள்ளுமாறு பிரித்தானியா, தமது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது.