கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் தொடர்சியாக தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவாண் குணசேகர தெரிவித்துள்ளார்.
அங்கிருந்து 6 ஆண்களும், 3 பெண்களும், 6 சிறார்களுமாக மொத்தம் 15 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவர்களில் ஆறு பேர் தற்கொலை குண்டுதாரிகள் என்று நம்பப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வீடொன்றில் படுகாயமடைந்த பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு அந்த பகுதியில் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதுடன், பாதுகாப்பு தரப்பினருக்கும், பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுகின்றவர்களுக்கும் இடையில் துப்பாக்கி சண்டையும் பதிவாகி இருந்தது.
அதேநேரம் இந்த சம்பவத்தில் பாதுகாப்பு தரப்பினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் காவற்துறை ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்த சம்பவம் இடம்பெற்ற சாய்ந்தமருது – வெலிவேரியன் என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் பொது மைதானம் ஒன்றில் நிறுத்தப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அம்பாறை – சாய்ந்தமருது, நிந்தவூர் பகுதிகளில் புலனாய்வுத் தகவல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சந்தேகநபர்களால் வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டதுடன், பாதுகாப்பு தரப்பினரை நோக்கி துப்பாக்கி தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.
இதனை அடுத்து இராணுவம் அவர்களுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலின் போது குறுக்கிட்ட பொதுபிரஜை ஒருவர் கொல்லப்பட்டதுடன், 3 அல்லது நான்கு பேர் காயமடைந்திருப்பதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நிந்தவூரில் பாதுகாப்பு படையினரால் பதிவு செய்யப்படாத புதிய சிற்றூர்ந்து ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த சிற்றூர்ந்து, தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவரான சஹ்ரானின் மைத்துனரான நியாஸ் என்பவருக்கு சொந்தமானது என்று படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அங்கு மீட்கப்பட்ட 2 அடையாள அட்டைகளை அடிப்படையாக கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், இந்த சிற்றூர்ந்து கடந்த 19ம் திகதி அக்கரைப்பற்றில் இருந்து பணத்துக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
தற்போது அந்த பகுதியில் விசேட அதிரடிப்படை மற்றும் காவற்துறையினரின் ஒத்துழைப்புடன் இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேநேரம் புலனாய்வு பிரிவு வழங்கிய தகவலுக்கு அமைய அம்பாறை -சம்பாந்துறையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பாரிய அளவான வெடிகுண்டுகளைத் தயாரிக்கும் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவளக்கடை பிரதேசங்களில் மீளறிவித்தல் வரையில் காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடகப்பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.