மன்னார் – திருகேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி மற்றும் மன்னார் நகர மத்திய பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி ஆகியவற்றின் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அது குறித்த வழக்குகள் இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.
எனினும் இன்றைய தினம் மன்னார் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா மன்றுக்கு சமூகம் அளிக்காத காரணத்தினால், பதில் நீதவான் இ.ஹயஸ் பெல்டானோ தலைமையில் குறித்த வழக்கு விசாரணைகள் இடம் பெற்றன.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட பதில் நீதவான் குறித்த இரு வழக்கு விசாரணைகளையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.
இன்றைய தினம் மன்னார் மனித புதைகுழி தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பு தொடர்பான விடயங்கள் முன்வைக்கப்படும் என எதிர்பாக்கப்பட்ட போதிலும் எந்தவித சமர்பிப்புக்களும் இடம் பெறவில்லை என எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, திருகேதீஸ்வர மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் ஆய்வு தொடர்பாகவும் எதுவித முன்வைப்புக்களும் இடம்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.