தமிழகத்தில் மாற்று திறனாளிகளாக இருப்பவர்களில் 24 .5 சதவீதத்தினரின் பெற்றோர், உறவுகளுக்குள் திருமணம் செய்தவர்கள் என்பது, மத்திய அரசின் ஆய்வு முடிவு மூலம் தெரியவந்துள்ளது.
சொந்தமும் சொத்தும் விட்டு போகக் கூடாது என்று உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் இந்தியாவின் பல பகுதிகளில் உள்ளது. இந்த வழக்கத்தால் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பது ஆய்வுகள் மூலமாக ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.
அதனை மீண்டும் உறுதிசெய்யும் விதமாக அமைந்துள்ளது மாற்றுத்திறனாளிகள் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகள்.
உறவுகளுக்குள் திருமணம் செய்ததால் ஊனம் ஏற்பட்ட பட்டியலில், 46.4 விழுக்காட்டுடன் அருணாச்சல பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. 24.5 விழுக்காட்டுடன், தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை உறவுமுறை திருமண ஊனம், கிராமப்புறங்களில் 27.2 சதவீதமாகவும், நகர்புறங்களில் 20.7 சதவீதமாகவும் உள்ளது.
இது குறித்து ஜெனடிக்ஸ் கிளினிக், அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர் அனுராதாவிடம் கேட்ட போது “ ஜீன்கள் நமது உடலில் உள்ள 46 குரோமோசோம்களில் உள்ளன.
இதில் இரண்டு குரோமோசோம்கள் நமது பாலினத்தை தீர்மானிக்கின்றன. மற்றவைகள் உடல் உறுப்புகளின் இயக்கத்தை தீர்மானிக்கின்றன.
இவற்றில் ஏதேனும் மாறுபாடுகள், குறைகள் இருந்தால் அவை உடலில் பாதிப்புகளை ஏற்படுத்தும். உறவுகளுக்குள் திருமணம் நடைபெற்றால் இந்த பாதிப்புகள் அதிகமாக இருக்கும்” என்று கூறினார்.
இதையும் பாருங்க :