நாம் தமிழர் கட்சி மீது வழக்கு தொடர்பவர்கள் மற்றும் தொண்டர்களை கைதுசெய்பவர்களை, தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கொலை செய்துவிடுவோம் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் ஈழப்போரின்போது உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களை கவுரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 27-ம் தேதி மாவீரர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, மதுரை ஒத்தக்கடை பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவீரர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தில்தான் நடிகர்களை தலைவர்களாக கொண்டாடுகிறார்கள் எனவும், ரஜினி அரசியலுக்கு வரட்டும், ஐ எம் வெயிட்டிங் என்றும் விஜய் பட பாணியில் பேசினார்.
நாம் தமிழர் கட்சி மீது வழக்கு தொடர்பவர்களே, தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இறந்து விடுங்கள் எனக்கூறிய சீமான், இல்லை எனில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை படுகொலை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று மீண்டும் கூறிய சீமான், வன்முறைக்கு எதிரான வன்முறையும் அகிம்சைதான் என பேசினார். எல்லாவற்றிற்கும் மேலாக தனக்கு வாக்களித்தால் நீங்கள் வாழ்வீர்கள் என்றும், இல்லையெனில் சாக வேண்டியதுதான் என்றும் சீமான் கூறினார்.
மேலும் ”ஆட்சிக்கு வந்தால் இலவசமாக கார் வழங்குவதாக வாக்குறுதி அளிப்பேன். தேர்தலில் வென்றதும் கார் கேட்பவர்களிடம் அம்பேத்காரின் புகைப்படத்தை காட்டுவேன்” என்று சீமான் நகைச்சுவையாக பேசினார்.
மேலும் சிங்களவர்கள் அனைவரும் நாயக்கர்கள் என்று கூறிய சீமான், தனது மொழியை காப்பாற்ற தான் துடிப்பதாகவும், அதற்காக அதிகாரத்திற்கு காத்திருக்கிறோம் என்று பேசினார்.
இதையும் பாருங்க :